இசைஞானி இளையராஜாவின் இளையநிலாவாக திகழ்ந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர்கள் இருவருக்கும் இடையில் கருமேகங்கள சூழ்ந்தன. தனது பாடல்களை ராயல்டி தராமல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என்று கடந்த ஆண்டு எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இது சர்ச்சையாக வெடித்தது. அதெல்லாம் நடந்து முடிந்த கதை. காலம் செய்த மாற்றம் தற்போது இசையும் நிலவும் இணைந்திருக்கிறது. இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 2ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் எஸ்.பி.பியும் கலந்துகொள்கிறார். அதற்கான ஒத்திகையில் பங்கேற்க வந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பிரிந்தவர் கூடினால் பேசவும் தோணுமோ... ராஜாவும், பாலுவும் ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். அங்கு அமைதி பரவி ஆனந்த கண்ணீர் துளிர்த்தது. இரவு நிலவும் வளருட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே... என்ற பாடல்வரிகள் இருவரது இதயங்களிலும் ரீங்காரமிட்டதை காற்றின் மொழியால் உணரமுடிந்தது.